'இந்தியர்கள் பணிபுரிந்த 4 கப்பல்கள் மீது தாக்குதல்' - மாலுமிகளின் நிலை என்ன?

பட மூலாதாரம், Getty Images
'நாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் தொடர்ந்து வெடிப்புச் சத்தம் கேட்டது. இதனால் சற்று பயம் ஏற்பட்டது. ஆனால், 'தைரியமாக இருங்கள்' என அதிகாரிகள் தரப்பில் தொடர்ந்து செல்போனில் தகவல் அனுப்பிவந்தனர்' என்கிறார் துபையில் வசிக்கும் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தடேயுஸ் அந்திரியாஸ்.
வணிக கப்பல் கேப்டனாக 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்துள்ள இவர், தற்போது துபையில் ஒருவருடன் இணைந்து சுற்றுலா படகு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
மார்ச் ஒன்றாம் தேதி இரானின் ஏவுகணை தாக்குதலை ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வான் பாதுகாப்பு அமைப்புகள் எதிர்கொண்டது குறித்து பிபிசி தமிழிடம் அவர் இவ்வாறு விவரித்தார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதல்களுக்கு பதிலடியாக மத்திய கிழக்கில் உள்ள இஸ்லாமிய நாடுகள் மீது இரான் தாக்குதல் நடத்தியது. இந்த நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ நிலைகளை தாக்குவதாக இரான் கூறியது.
அந்தவகையில், சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், பஹ்ரைன், குவைத் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகள் இரானின் தாக்குதலுக்கு இலக்காயின.
அத்துடன், உலகின் முக்கிய கடல் வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்கள் தாக்குதலுக்கு இலக்காக நேரிடும் என்றும் இரான் எச்சரித்துள்ளது.

பட மூலாதாரம், AFP via Getty Images
'4 கப்பல்கள் மீது தாக்குதல்'
திங்கள்கிழமை (மார்ச் 2) மாலை 6 மணி வரை இரான் அருகே கடற்பரப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறுகிறார், அகில இந்திய கப்பல் மாலுமிகள் சங்க நிறுவனர் விமல்சன்.
ஆனால், அந்தக் கப்பல்களில் இருந்த மாலுமிகள் யாருக்கும் இந்த தாக்குதல்களால் பாதிப்பு ஏற்படவில்லை என்று அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
"இந்தத் தாக்குதலில் நான்கு கப்பல்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கப்பலிலும் சுமார் 25 மாலுமிகளுக்கும் மிகாமல் உள்ளனர். அவர்களில் கணிசமானோர் இந்தியர்கள் ஆவர். நெட்வொர்க் சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் அவர்களை தொடர்பு கொள்வதில் சிக்கல் நீடிக்கிறது" என்கிறார் விமல்சன்.
"இந்திய மாலுமிகளை மீட்பதற்கு அரசாங்கம் போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" எனவும் தெரிவித்தார்.
'முழுமையான தரவுகள் வரவில்லை'
கப்பலில் தவிக்கும் மாலுமிகளை மீட்பதற்கான முயற்சிகளை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மேற்கொண்டு வருவதாகக் கூறுகிறார், பி.ஏ.கான்.
மேரிடைம் யூனியன் ஆஃப் இந்தியா (maritime union of India) என்ற அமைப்பின் சென்னை பிரிவின் தகவல் தொடர்பு அலுவலராக (liason officer) இவர் இருக்கிறார்.
"வளைகுடா நாடுகளுக்குச் சென்றுள்ள கப்பல்களில் தவித்துக் கொண்டிருக்கும் நபர்கள் பற்றிய விவரம் மட்டுமே வருகிறது. அதில், இந்தியாவில் குறிப்பிட்ட மாநிலத்தைச் சேர்ந்த நபர்கள் தொடர்பான தகவல் எதுவும் எங்களுக்கு வரவில்லை" என்கிறார் அவர்.
"முழுமையான தரவுகள் வந்தால் மட்டுமே பாதிப்பு குறித்த விவரங்கள் தெரியவரும்" எனக் கூறும் பி.ஏ.கான், "யாரெல்லாம் இந்தியா கிளம்பி வரத் தயாராக உள்ளனர் என்ற விவரத்தை தூதரகத்துக்கு தெரிவிக்குமாறு வெளியுறவுத்துறை கேட்டுக் கொண்டுள்ளது" எனக் கூறினார்.
அவர்களை அங்கு சென்று அழைத்து வருவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறும் அவர், "ஹோர்முஸ் நீரிணையில் இரண்டு கால்வாய்கள் உள்ளன. எந்த இடத்தில் கால்வாயை மூடியுள்ளனர் என்ற விவரம் தெரியவில்லை. இதனைத் தாண்டிச் செல்லும் போது குவைத், தோஹா, கத்தார் ஆகியவை வருகின்றன" என்கிறார்.
தற்போதைய சூழலில் கப்பலில் தங்கியிருப்பதே பாதுகாப்பானது என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறும் பி.ஏ.கான், "பெரியளவில் பாதிப்பு ஏற்பட்டதாக இதுவரை மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி அழைப்புகள் எதுவும் தங்களுக்கு வரவில்லை" எனத் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Reuters
துபை, அபுதாபியில் என்ன நிலவரம்?
இரான் நடத்திய தாக்குதலால் துபையில் பதற்றம் நிலவியதாகவும், வீட்டை விட்டு வெளியே வரவே பயப்பட வேண்டிய நிலை இருந்ததாகவும் கூறுகிறார், தடேயுஸ் அந்திரியாஸ்.
துபையில் டிஸ்கவரி கார்டன் பகுதியில் வசித்து வரும் இவர், துபை துறைமுகத்தில் சுற்றுலா படகுகளை இயக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
"இன்னமும் படகு போக்குவரத்து தொடங்கவில்லை. திங்கள்கிழமை (மார்ச் 2) கூட வெடிப்புச் சத்தம் கேட்டது. அதற்கு முன்பாக செல்போனில் சைரன் சத்தம் ஒலித்தது. 'தைரியமாக இருங்கள்.. எந்தப் பிரச்னையும் இல்லை' என அதிகாரிகள் கூறினர்" என்றார் அவர்.
இரானில் இருந்து வந்த ஏவுகணைத் தாக்குதல் இடைமறிக்கப்பட்டதால் தொடர்ந்து அதிக வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும் அவர் கூறினார்.
"கடந்த ஒன்றாம் தேதி தாக்குதல் அதிகரித்தபோது யாரும் வெளியில் வரக் கூடாது என அதிகாரிகள் அறிவுறுத்தினர். சுற்றுலா படகு போக்குவரத்தும் முழுமையாக நிறுத்தப்பட்டுவிட்டது. அதேநேரம், நேற்று (மார்ச் 3) முதல் இயல்புநிலை திரும்பியது போன்று தென்படுகிறது" என்கிறார் அவர்.
அபுதாபியில் வசிக்கும் ஷாஜன் அஜித், அங்கு மார்ச் 3 முதல் அலுவலகங்கள் இங்குவதாகக் கூறுகிறார். "தற்போது அமைதியான சூழலே நிலவுகிறது" என பிபிசி தமிழிடம் அவர் தெரிவித்தார்.
கத்தாரில் என்ன நிலவரம்?

பட மூலாதாரம், Getty Images
அதேநேரம், கத்தாரில் மக்கள் நடமாட்டம் சாலைகளில் வெகுவாகக் குறைந்துவிட்டதாகக் கூறுகிறார் அங்கு பணிபுரியும் தமிழக தொழிலாளி ஒருவர்.
நாகர்கோவிலை சேர்ந்த அவர் பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசி தமிழிடம் சில தகவல்களை விவரித்தார். "வீட்டில் இருந்தே வேலை பார்க்குமாறு அதிகாரிகள் அறிவித்துவிட்டனர். உடல்ரீதியாக உழைப்பு தேவைப்படும் இடங்களுக்கு மட்டுமே தொழிலாளர்கள் செல்கின்றனர்" என்கிறார்.
கடந்த சனிக்கிழமையில் இருந்து தொடர்ந்து மூன்று நாட்கள் அனைத்தும் மூடியே கிடந்ததாகக் கூறும் அவர், "தற்போது நிலைமை ஓரளவு சீரடைந்துவிட்டது" எனக் கூறுகிறார்.
சூப்பர் மார்கெட்டுகளில் பொருட்கள் தாராளமாக கிடைத்தாலும் இறக்குமதி செய்யப்படும் பழங்கள், காய்கறிகள் குறைவான அளவே வந்துள்ளதாகத் தெரிவித்தார்.
"போர்ச் சூழலைக் காரணம் காட்டி எந்த நிலையிலும் காய்கறி மற்றும் பொருட்களின் விலையை அதிகரிக்கக் கூடாது என அதிகாரிகள் கூறிவிட்டனர். இதனை அவ்வப்போது அவர்கள் ஆய்வு நடத்தி சோதிக்கின்றனர்" எனவும் அவர் தெரிவித்தார்.
விமான நிலையங்கள் மூடப்பட்டுவிட்டதால் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறும் அவர், "இரான் ஏவுகணைகளை தாக்கி முறியடிக்கும்போது அதில் இருந்து வெளிவரும் சிதறல்கள் தாக்கியதால் சிலருக்கு காயம் ஏற்பட்டது" என்கிறார்.
பொதுமக்கள் யாரும் வெளியில் செல்லக் கூடாது எனவும் ஜன்னல் அருகில் அமரக் கூடாது எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
ஒவ்வொரு முறையும் தாக்குதல் நடப்பது தொடர்பாக சைரன் சத்தத்துடன் செல்போன் ஒலிப்பதால் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் மக்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கத்தாரில் அதிகாரிகள் தரப்பில் பெரிதாக கெடுபிடிகள் இல்லை என்றாலும் தம்மைத் தாமே தனிமைப்படுத்திக் கொள்ளும் மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கப்பல் போக்குவரத்து இயக்குநர் ஜெனரல் அலுவலகம் தகவல்
இந்திய கப்பல் போக்குவரத்து இயக்குநர் ஜெனரல் அலுவலகம் மார்ச் 2 ஆம் தேதி அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன்படி,
- ஹோர்முஸ் நீரிணை மற்றும் பாரசீக வளைகுடா, ஓமன் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள கடற்பகுதிகளில் நிலைமை கூர்ந்து கண்காணிக்கப்படுகிறது.
- இந்தியக் கொடி ஏற்றப்பட்ட கப்பல்கள் தடுக்கப்பட்டதாகவோ, உயிரிழப்பு ஏதும் நடந்ததாகவோ இதுவரை எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.
- இந்திய மாலுமிகள் தொடர்புடைய நான்கு சம்பவங்கள் இதுவரை பதிவாகியுள்ளன. அதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர், ஒருவர் காயமடைந்துள்ளார். அந்த கப்பல்கள் அனைத்தும் வெளிநாட்டுக் கொடி ஏற்றப்பட்டவை. கப்பலில் இதர பணியாளர்கள் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் உள்ளதாகவும் இந்திய கப்பல் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. பாதிப்புக்கு ஆளான கடற்படையினர் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது.
- இந்த விவகாரங்களை கவனிக்க 'உடனடி நடவடிக்கை குழு' ஒன்றை (Quick response team) அமைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பதற்றம் அதிகரித்துள்ள இந்தக் காலகட்டத்தில் இந்திய மாலுமிகள் மற்றும் வணிகக் கப்பல் போக்குவரத்து ஆகியவற்றின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருவதாக, கப்பல் போக்குவரத்துறை இயக்குநர் ஜெனரல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












