பாபா படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய ரஜினிகாந்த் விரும்புவது ஏன்?

பாபா

பட மூலாதாரம், ARUN SANKAR

    • எழுதியவர், கல்யாண் குமார்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

2002 ஆகஸ்ட் 15ல் வெளியான ரஜினியின் பாபா படம், ரசிகர்களை மிகவும் அதிருப்திக்கு உள்ளாக்கிய படம். ரஜினியின் மிக மோசமான திரைப்படங்களில் அதுவும் ஒன்றாகிப் போனது.

ரஜினியே தன் லோட்டஸ் இண்டர்நேஷனல் என்ற நிறுவனத்தின் மூலம் இதை தயாரித்திருந்தார். கதையும் அவரே எழுதியிருந்தார். ஆன்மிகத்தையும் அரசியலையும் குழப்பி எடுத்து தன் ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்திற்கு ஆளாக்கி இருந்தார் என்ற விமர்சனம் அப்போது எழுந்தது.

வசூலில் பலத்த நஷ்டம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்களை தன் வீட்டுக்கு அழைத்து அவர்களுக்கு நஷ்டஈடாக கணிசமான தொகையை திருப்பிக் கொடுத்தார். மேலும் பாபா ரிலீஸான போது அரசியல் ரீதியாக பாட்டாளி மக்கள் கட்சியினர் பலத்த எதிர்ப்பை காட்டியிருந்தனர்.

இத்தனை நெகடிவ் பாயிண்ட்கள் இருந்தாலும் மறுபடி அதை புதுப்பித்து, தன் பிறந்தநாளான டிசம்பர் 12ல் மறுபடி வெளியிடப் போவதாக ரஜினி அறிவித்திருக்கிறார்.

ஃபிலிமில் உருவாக்கப்பட்ட இந்தப் படம், இப்போது டிஜிட்டலில் உருமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. கலர் கிரேடிங், சவுண்ட் எஃபெக்ட் என்று நவீன டெக்னாலஜியில் ரீரிலீஸ் செய்யப்படவிருக்கிறது என்கிறார் அதில் பணிபுரிந்த தொழில் நுட்பக் கலைஞர் ஒருவர்.

ரஜினியின் எத்தனையோ வெற்றிப் படங்கள் இருக்க, ஓடாத பாபா படத்தை ரீ ரிலிஸ் செய்ய என்ன காரணம்?

“ ரஜினியின் ஆன்மிகத் தேடல்தான் இதற்கும் காரணமாக இருக்கும். படம் வெளியாகி இருபது வருடங்கள் ஆகிவிட்டன. படத்தில் அப்போது சொல்லப்பட்டிருந்த சில கருத்துகள் இன்றைய இளைஞர்களுக்கும் சென்றடைய வேண்டும் என்று ரஜினி நினைத்திருக்கலாம். இது ஒரு துணிச்சலான முயற்சிதான் “ என்கிறார் ரஜினியின் அண்ணாமலை படத்தின் வசனகர்த்தாவும் இயக்குநருமான டி.கே.சண்முகசுந்தரம்.

"ஐந்து வருடங்களுக்கு முன் ஓர் ஆன்மிக மேடையில் பேசிய ரஜினி. பாபா எப்படி உருவானது என்பது பற்றி பேசியிருந்தார்.

படையப்பா படத்திற்குப் பிறகு இனி படங்களில் நடிக்கப் போவதில்லை என்று முடிவு செய்து, ஆன்மிகத்தின் மீது என் முழு நேரத்தையும் செலவிட்டேன். அப்போது சச்சிதானந்தா சுவாமிகள் என்னை அமெரிக்காவில் உள்ள அவரது ஆசிரமத்திற்கு வரச் சொல்லி அழைத்திருந்தார்.

சுரேஷ் கிருஷ்ணா

பட மூலாதாரம், Suresh Krishna

அவர்தான் உங்கள் படங்களின் மூலம் ஆன்மிகத்தை வளர்த்தெடுங்கள் என்று கேட்டுக் கொண்டார். அங்கேதான் பாபாஜியின் வாழ்க்கை வரலாற்றை படித்தேன். எத்தனை முறை  படித்தேன் என்று சொல்லமுடியவில்லை.

அங்கிருந்து பெங்களூருக்கு வந்தபோது ஒருநாள் எனக்குள் இந்த பாபா படத்தின் கதை, ஒரு திரைப்படமாகவே ஓடியது. உடனே நானே, கதை திரைக்கதை எழுதி தயாரித்தேன். காசுக்காக அந்தப் எடுக்கப்படவில்லை என்பதால் அதில் நஷ்டமடைந்தவர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுத்தேன் ” என்று குறிப்பிட்டார். 

"இன்றைய சூழலில் மித்தாலஜி படங்களுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு ரஜினியை யோசிக்க வைத்திருக்கும். வெளிவந்தபோது இருந்த சில குறைகளை இதில் நிவர்த்தி செய்திருக்கிறார்கள். ஹீரோவுக்கு ஏழு வரம் கிடைக்கும் என்பதை ஐந்து வரமாக குறைத்து, மூன்று மணி நேரப்படத்தை இரண்டரை மணி நேரப் படமாக்கிறார்கள், பல இடங்களில் ரஜினி வாய்ஸ் ஓவர் கொடுத்திருக்கிறாராம். டிஜிட்டல் மார்க்கெட்டில் இந்தப் படத்திற்கு நிச்சயம் வரவேற்பு கிடைக்கும் “ என்று உறுதியளிக்கிறார் தயாரிப்பாளர் எஸ். தாணு.

ஆனால் இதெயெல்லாம் மறுக்கிறார், இந்தியா டுடே தமிழ் பதிப்பின் சினிமா விமர்சகர் தமிழன்பன்.

டி கே சண்முகசுந்தரம்

பட மூலாதாரம், Tk Shanmuga Sundaram

"1991ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபின்பு, அவரை எதிர்த்து, தன் படங்களில் வசனம் பேசியே ரஜினி தன் படங்களை ஓட வைத்தார். அவருடைய ஒவ்வொரு படம் வரும்போதும், அவர் அரசியலுக்கு வருகிறார் என்கிற செய்தி பெரிதாகும்.

அது அப்படம் வெளியாகும்வரை பெரிதாகப் பேசப்படும். இப்போது அவர் அரசியலுக்கு வரவில்லையென்று அறிவித்த பின்பு, அவர் நடித்த தர்பார், அண்ணாத்த ஆகிய படங்கள் பெரும் தோல்வி கண்டன.

அதனால் இப்போது நடிக்கும் ஜெயிலர் பட்த்தை ஓட வைக்க மீண்டும் அரசியலுக்கு வருவேன் என்கிற ஆயுதத்தை கையில் எடுக்கிறார். அதற்காகவே பாபா திரும்ப வெளியிடப்படுகிறது. சமீபத்தில் வெளிடப்பட்ட அதன் புதிய முன்னோட்டத்தில் ”ஐயாம் கம்மிங்” என்கிற வசனமே இதற்கு சாட்சி.

மேலும் இப்போது டிஜிட்டல் வியாபாரம் பெரிதாக இருக்கிறது. எனவே அப்போது ஓடாத படத்தை மீண்டும் வெளீயிட்டு எல்லா மொழிகளிலும் ஓடிடி உரிமையை விற்றால் பெரும் தொகை கிடைக்கும் என்பது ரஜினியின் கணக்கு “ என்கிறார் தமிழன்பன்.

ஆனால், ரஜினியின் தீவிர ரசிகரும் பின்னர் அவரை வைத்தே பேட்டை படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ், “ ரஜினி சாரின் ரசிகனான நான், பாபா வந்த போது மதுரையில் அந்தப் படத்தை இருபது தடவை பார்த்தேன். தோல்விப்படம் என்றாலும் அதில் இருக்கும் அவரது ஆன்மிகத் தேடல் என்னை பாதித்தது. இப்போது அது டிஜிட்டலில் வரும்போது உலகம் முழுக்க நிறையப்பேரை அது நிச்சயம் சென்றடையும். இதன் தொடர்ச்சியாக பல படங்கள் நவீனமயமாக்கப்படும் “ என்கிறார்.

ரஜினி பாலா

பட மூலாதாரம், Rajini Bala

அண்ணாமலை, பாட்ஷா, வீரா போன்ற ரஜினியின் வெற்றிப் படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணாதான் பாபாவையும் இயக்கி இருந்தார். “ ஒரு படம் வெளியானபிறகுதான் அது நல்லா இருக்கு நல்லா இல்லை என்று ஒரு விமரசனம் வரும்.

ஆனால் பாபா படம் வெளியாகும் முன்பே தண்ணி அடிக்கிறார், சிகரெட் பிடிக்கிறார் என்று பலவிதமான நெகட்டிவ்வான விமர்சனங்கள், வெளியாகி ரசிகனை குழப்பி விட்டதுதான் அப்போதைய தோல்விக்குக் காரணம். அதெல்லாம் இப்போது சரிசெய்யப்பட்டு, ஏற்கனவே பார்த்தவர்களுக்கும் புதிதாக பார்ப்பவர்களுக்கும் ஒரு புதிய அனுபவத்தை பாபா கொடுக்கும். ‘’ என்கிறார் சுரேஷ் கிருஷ்ணா.

” பாபாவின் புதிய வடிவத்தைப் பார்க்க சென்னை ரோகிணி தியேட்டரில் முதல் நாள் அதிகாலை நாலுமணிக் காட்சிக்காக காத்திருக்கிறேன் “ என்கிறார் ரஜினியின் தீவிர ரசிகரான பாலசுப்ரமணியம்.’ இவர் தன் பெயரை ரஜினி பாலா’ என்றே மாற்றிக் கொண்டவர்.

அரசியலுக்கு வந்து, பரப்பபான தேர்தல் முடிவுகளை சந்திக்காதவர் ரஜினி. ஆனாலும் பாபா படத்தின் ரீ ரிலீஸ், அவருக்கு வெற்றியைத் தருமா தோல்வியைத் தருமா என்பது, அவரது பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி அதன் முடிவுகள் தெரிந்துவிடும்.

காணொளிக் குறிப்பு, காட்டு சிறுத்தை - வீட்டு நாய் இடையே சண்டை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: