ஹோர்முஸ் நீரிணையை இரான் மூடினால் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு என்ன பாதிப்பு?

பட மூலாதாரம், Reuters

    • எழுதியவர், கேவின் பட்லர், பிபிசி நியூஸ், சிங்கப்பூர், பிபிசி பெர்ஷியன் மற்றும் டோபி மேன்
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

உலகின் மிகவும் பரபரப்பான எண்ணெய் கப்பல் பாதையான ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்ல முயற்சிக்கும் எந்தவொரு கப்பலுக்கும் "தீ வைப்போம்" என்று இரான் அறிவித்துள்ளது.

வழக்கமாக, உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயுவில் சுமார் 20% வளைகுடாவில் உள்ள இந்த குறுகிய கப்பல் பாதை வழியாகவே செல்கிறது. ஆனால், இரானின் ஜெனரல் சர்தார் ஜப்பாரி, டெஹ்ரான் இப்போது, "ஒரு சொட்டு எண்ணெய் கூட இப்பகுதியை விட்டு வெளியேற விடாது" என்று கூறினார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு இரானின் பதிலடியால் சர்வதேச வர்த்தகத்தில் ஏற்பட்ட நிச்சயமற்றத்தன்மை மற்றும் இடையூறு ஏற்கெனவே எண்ணெய் விலைகளை உயர்த்தியுள்ளது.

இந்த நீரிணையை மூடுவது உலகளவில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையை மேலும் உயர்த்தக்கூடும், மேலும் இந்த நீர்வழி பாதையாக செல்லும் கச்சா எண்ணெயை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளில் சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் சிலவற்றைப் பாதிக்கலாம்.

மன்னிக்கவும், குறைந்த இணையத்தை பயன்படுத்தும் இந்த பக்கத்தில் கட்டுரையின் இந்த பகுதியை காணவியலாது.

ஹோர்முஸ் நீரிணை என்றால் என்ன - அது எங்கே இருக்கிறது?

ஹோர்முஸ் நீரிணை உலகின் மிக முக்கியமான கப்பல் பாதைகளில் ஒன்றாகும், மேலும் எண்ணெய் போக்குவரத்துக்கு ஒரு முக்கியமான நெரிசல் புள்ளியாகவும் உள்ளது.

வடக்கே இரானாலும், தெற்கே ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) ஆகிய நாடுகளாலும் சூழப்பட்டுள்ள இந்த பாதை - அதன் நுழைவுவாயிலிலும் வெளியேறும் இடத்திலும் சுமார் 50 கிமீ (31 மைல்) அகலமும், அதன் மிகக் குறுகிய இடத்தில் சுமார் 33 கிமீ அகலமும் கொண்டது. இவை வளைகுடாவை அரபிக் கடலுடன் இணைக்கிறது.

இந்த நீரிணை உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் கப்பல்களை நிறுத்தும் அளவுக்கு ஆழமாக உள்ளது, மேலும் மத்திய கிழக்கின் முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியாளர்கள் - மற்றும் அவர்களின் வாடிக்கையாளர்கள் இதைப் பயன்படுத்துகின்றனர்.

2025 ஆம் ஆண்டில், அமெரிக்க எரிசக்தி தகவல் நிர்வாகத்தின் (ஈஐஏ) மதிப்பீடுகளின்படி, ஒரு நாளைக்கு சுமார் 20 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் ஹோர்முஸ் நீரிணை வழியாக சென்றது.

இது வருடத்துக்கு கிட்டத்தட்ட 600 பில்லியன் டாலர் (447 பில்லியன் பவுண்ட்) மதிப்புள்ள எரிசக்தி வர்த்தகமாகும்.

அந்த எண்ணெய் இரானில் இருந்து மட்டுமல்ல, இராக், குவைத், கத்தார், செளதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற பிற வளைகுடா நாடுகளிலிருந்தும் வருகிறது.

நீரிணையை மூடுவதால் ஏற்படும் பாதிப்பு என்னவாக இருக்கும்?

ஒவ்வொரு மாதமும் சுமார் 3,000 கப்பல்கள் இந்த நீரிணை வழியாக பயணிக்கின்றன.

இந்த நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு அச்சுறுத்தல்கள் நீண்ட காலம் நீடிக்கும்போது, எண்ணெயின் விலையும் - அதன் கப்பல் போக்குவரத்து செலவும் - அதிகமாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

"யாரும் அந்த வழியாக செல்லத் துணியாத அளவுக்கு அது நடைமுறையில் மூடப்பட்டிருக்கிறது," என்று எரிசக்தி சந்தை நுண்ணறிவுகளை வழங்கும் உலகளாவிய அபாய மேலாண்மை அமைப்பின் தலைமை ஆய்வாளர் ஆர்னே லோஹ்மன் ராஸ்முசென், பிபிசியின் அமெரிக்க கூட்டு ஊடக நிறுவனமான சிபிஎஸ் நியூஸிடம் தெரிவித்தார்.

"உங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம், உங்களால் காப்பீடு பெற முடியாது அல்லது அது மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கலாம். எனவே பாதுகாப்பு நிலைமை சீராகும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டும்... நீரிணையில் இருந்து வரும் எண்ணெய் மற்றும் எரிவாயு துண்டிக்கப்பட்டால், அது சந்தைக்கு குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும்," என்று அவர் மேலும் கூறினார்.

"எந்தவொரு நேரடி தடுப்பும் இல்லை என்றாலும், இரானியர்களிடமிருந்து வரும் அச்சுறுத்தல்கள், டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் ஆகியவை, கப்பல்கள் நீரிணை வழியாகச் செல்லப் போவதில்லை என்பதைக் குறிக்கிறது."

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

வார இறுதியில் ஹோர்முஸ் நீரிணை அருகே குறைந்தது மூன்று கப்பல்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, உலகளாவிய அளவுகோல் பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 82 டாலரை (61 பவுண்டுகளை) எட்டியது.

இதனால் சுமார் 150 டேங்கர் கப்பல்கள் கடலில் சிக்கிக்கொண்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

லண்டன் பங்குச் சந்தைக் குழுமத்தின் தரவுகளின்படி, மத்திய கிழக்கிலிருந்து சீனாவுக்கு எண்ணெய் அனுப்ப ஒரு சூப்பர் டேங்கரை வாடகைக்கு எடுப்பதற்கான செலவு கடந்த வார விலையிலிருந்து கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்து, 400,000 டாலருக்கும் (298,300 பவுண்ட்) அதிகமான உச்சத்தை எட்டியுள்ளது.

இந்த முக்கியமான கப்பல் பாதை மூடப்படுவது, எரிசக்தி ஏற்றுமதியை பெரிதும் நம்பியுள்ள பொருளாதாரங்களைக் கொண்ட செளதி அரேபியா போன்ற வளைகுடா நாடுகளையும் பாதிக்கும்.

பட மூலாதாரம், Reuters

ஒப்பீட்டளவில், இரான் ஒரு நாளைக்கு சுமார் 1.7 மில்லியன் பீப்பாய்களை ஏற்றுமதி செய்கிறது என்று சர்வதேச எரிசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மார்ச் 2025 இல் முடிவடைந்த நிதியாண்டில் இரான் 67 பில்லியன் டாலர் (50 பில்லியன் பவுண்ட்) மதிப்புள்ள எண்ணெயை ஏற்றுமதி செய்தது. இரான் மத்திய வங்கியின் மதிப்பீடுகளின்படி இது கடந்த பத்தாண்டுகளில் அதன் அதிகபட்ச எண்ணெய் வருவாய் ஆகும்.

இந்த நீரிணையை மூடுவது ஆசியாவையும் கடுமையாகப் பாதிக்கும்.

2022 ஆம் ஆண்டில், ஹோர்முஸ் நீரிணையை விட்டு வெளியேறும் கச்சா எண்ணெய் மற்றும் கண்டன்சேட்டுகள் (condensates - பொதுவாக இயற்கை எரிவாயுவுடன் நிகழும் குறைந்த அடர்த்தி கொண்ட திரவ ஹைட்ரோகார்பன்கள்) சுமார் 82% ஆசிய நாடுகளுக்குச் சென்றதாக அமெரிக்க எரிசக்தி தகவல் நிர்வாகத்தின் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

உலக சந்தைக்கு இரான் ஏற்றுமதி செய்யும் எண்ணெயில் 90% சீனா மட்டுமே வாங்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

சீனா அந்த எண்ணெயைப் பயன்படுத்தி பொருட்களை உற்பத்தி செய்து பின்னர் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதால், எண்ணெய் விலை அதிகரிக்கும், அதன்மூலம் நுகர்வோருக்கான பொருட்கள் விலையும் அதிகரிக்கக்கூடும்.

இரான் எப்படி நீரிணையை மூட முடியும்?

ஐக்கிய நாடுகள் சபையின் விதிகள் உலக நாடுகள் தங்கள் கடற்கரையிலிருந்து 12 கடல் மைல்கள் (13.8 மைல்கள்) வரையிலான பிராந்திய கடல்களைக் கட்டுப்படுத்த அனுமதிக்கின்றன.

மிகக் குறுகிய இடத்தில், ஹோர்முஸ் நீரிணையும் அதன் கப்பல் பாதைகளும் முழுமையாக இரான் மற்றும் ஓமனின் பிராந்திய நீர்நிலைகளுக்குள் அமைந்துள்ளன.

இரான் நீரிணையை எவ்வாறு மூட திட்டமிட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் நிபுணர்களின் கூற்றுப்படி, அதைச் செய்வதற்கான மிகவும் பயனுள்ள வழிகளில் ஒன்று, வேகமான தாக்குதல் படகுகள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களைப் பயன்படுத்தி கண்ணிவெடிகளை இடுவதாகும்.

இரானின் வழக்கமான கடற்படை மற்றும் இரான் புரட்சிகர காவல் படையின் (IRGC) கடற்படை வெளிநாட்டு போர்க்கப்பல்கள் மற்றும் வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்களை நடத்தக்கூடும்.

இருப்பினும், பெரிய ராணுவக் கப்பல்கள் அமெரிக்க வான்வழித் தாக்குதல்களுக்கு எளிதான இலக்குகளாக மாறக்கூடும், மேலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரானின் கடற்படையை அழிப்பதே தனது நோக்கங்களில் ஒன்று என்று கூறியுள்ளார்.

இரானின் விரைவுப் படகுகள் பெரும்பாலும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளைக் கொண்டவை. மேலும் அந்த நாடு பல்வேறு மேற்பரப்புக் கப்பல்கள், பகுதியளவு நீரில் மூழ்கிச் செல்லக்கூடிய கப்பல் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களையும் இயக்குகிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயுவில் சுமார் 20% ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்கிறது

இந்த நீரிணை வழியாக கடல் போக்குவரத்தை மீண்டும் நிலைநாட்ட அமெரிக்கா முன்னர் தனது ராணுவ வலிமையைப் பயன்படுத்தியுள்ளது.

1980களின் பிற்பகுதியில், எட்டு ஆண்டுகால இரான்-இராக் போரின்போது, எண்ணெய் வசதிகள் மீதான தாக்குதல்கள் "எண்ணெய் கப்பல்களின் போராக" மாறின. இதில் இரு நாடுகளும் பொருளாதார அழுத்தத்தை செலுத்த போரில் ஈடுபடாத நடுநிலை நாடுகளின் கப்பல்களைத் தாக்கின.

இராக்கின் எண்ணெயை ஏற்றிச் செல்லும் குவைத் கப்பல்கள் குறிப்பாக பாதிக்கப்படக்கூடியவை. இறுதியில், அமெரிக்க போர்க்கப்பல்கள் வளைகுடா வழியாக அவர்களை அழைத்துச் செல்லத் தொடங்கின, இது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மிகப்பெரிய கடற்படை மேற்பரப்பு போர் நடவடிக்கைகளில் ஒன்றாக மாறியது என்று அமெரிக்க கடற்படை நிறுவனம் தெரிவித்துள்ளது.

மாற்று வழிகள் மூலம் ஈடுசெய்ய முடியுமா?

ஹோர்முஸ் நீரிணை மூடப்படும் என்ற தொடர்ச்சியான அச்சுறுத்தல், பல ஆண்டுகளாக, வளைகுடா பிராந்தியத்தில் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளை மாற்று ஏற்றுமதி வழிகளை உருவாக்கத் தூண்டியுள்ளது.

அமெரிக்க எரிசக்தி தகவல் நிர்வாகத்தின் கூற்றின்படி, செளதி அரேபியா ஒரு நாளைக்கு 5 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயை கொண்டு செல்லும் திறன் கொண்ட 1,200 கி.மீ நீள குழாய் பாதையை இயக்குகிறது.

கடந்த காலங்களில் கச்சா எண்ணெயை எடுத்துச் செல்வதற்காக ஓர் இயற்கை எரிவாயு குழாய்த்திட்டத்தை தற்காலிகமாக பயன்படுத்தியுள்ளது.

ஐக்கிய அரபு அமிரகம் தனது உள்நாட்டு எண்ணெய் வயல்களை ஓமன் வளைகுடாவில் உள்ள புஜைரா துறைமுகத்துடன் ஒரு நாளைக்கு குறைந்தது 1.5 மில்லியன் பீப்பாய் கொள்ளளவு கொண்ட குழாய் வழியாக இணைத்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து செல்ல மாற்று உள்கட்டமைப்பு வழியாக எண்ணெய் திருப்பி விடப்படலாம், ஆனால் இது ஒரு நாளைக்கு 8-10 மில்லியன் பீப்பாய் வரை விநியோகத்தில் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு