திட்வா புயல் இலங்கையை விட்டு நீங்கினாலும் தீராத ஆபத்து - என்ன நடக்கிறது?

திட்வா புயல், இலங்கை
    • எழுதியவர், பிபிசி சிங்கள சேவை
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

புயல் இலங்கையை விட்டு நகர்ந்துள்ளது. இன்று மழை நின்றுவிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அனார்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இருந்தாலும் கெலனி ஆற்றின் நீர் மட்டம் கொழும்பு புறநகர்ப் பகுதிகளுக்கு இன்னும் பெரும் வெள்ள அபாய எச்சரிக்கை ஏற்படும் அளவுக்கே இருக்கிறது. இதுபோக, நேற்று மத்திய மாகாணத்தில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது.

மழை நின்றுவிட்டாலும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் அதிகமாக இருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. மலைச் சரிவுகளுக்கு அருகிலுள்ள பகுதிகளில் நிலம் நிலையற்றதாக இருக்கிறது. பதுளை மாவட்டத்துடன் கண்டியிலும் அதிகளவான இறப்புகள் பதிவாகியுள்ளன. மீட்புப் பணியில் இருப்பவர்களிடமிருந்து இன்று தகவல்கள் பெறப்படும் எண்பதால், பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க

பட மூலாதாரம், PMD

படக்குறிப்பு, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க

முன்னதாக, இலங்கை முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக, இலங்கை ஜனாதிபதி ஊடக இயக்குநர் ஜெனரல் பிரசன்னா பெரேரா தெரிவித்தார்.

பிபிசி சிங்கள சேவையிடம் அவர் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

இலங்கையில் பேரிடர் சூழல் நிலவுவதால் இக்காலகட்டத்தில் அத்தியாவசிய சேவைகளை பராமரிக்கும் பொருட்டு அவசர நிலையை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பிரகடனப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க

பட மூலாதாரம், PMD

படக்குறிப்பு, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்ற கூட்டம்

அவசர நிலை என்பது என்ன?

அவசர நிலை என்பது ஒரு அரசுக்கு அதிகளவு அதிகாரங்களை அளிக்கிறது.

பெரிய ஆபத்து, அச்சுறுத்தல் அல்லது பேரிடர் நேரத்தில் நாட்டையும் மக்களையும் பாதுகாக்க சில அடிப்படை உரிமைகளை கட்டுப்படுத்துவதற்கான அதிகாரங்களும் இதன்கீழ் அரசாங்கத்திற்கு இருக்கும்.

எனினும், இலங்கை அரசியலமைப்பு அவசர நிலை குறித்த அதிகாரபூர்வ விளக்கத்தை வழங்கவில்லை. ஆனாலும், அவசர நிலையை பிரகடனப்படுத்துவதற்கு இட்டுச் செல்லும் நிபந்தனைகள் குறித்து இலங்கை பொது பாதுகாப்பு சட்டம் (Public Security Ordinance) விளக்கியுள்ளது.

"பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான சேவைகள் மற்றும் விநியோகங்களை பராமரிக்கவோ அல்லது அவசரகால சூழல்களில் பொதுமக்களை பாதுகாக்கும் பொருட்டோ" ஜனாதிபதி அவசரநிலையை பிரகடனப்படுத்தலாம் என அதற்கான நிபந்தனையாக அதில் விளக்கப்பட்டுள்ளது.

''தேச பாதுகாப்பு, பொதுமக்கள் ஒழுங்கு மற்றும் அத்தியாவசிய சேவைகளை பராமரிப்பதை உறுதி செய்வதை'' அவசர நிலை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இலங்கையில் கனமழை காரணமாக பெரும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது
படக்குறிப்பு, இலங்கையில் கனமழை காரணமாக பெரும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது

அவசர நிலையை யார் பிரகடனப்படுத்தலாம்?

இலங்கை அரசியலமைப்பு சட்டம் பிரிவு 155-ன் கீழ், அவசர நிலையை பிரகடனப்படுத்தும் அதிகாரம் கொண்ட ஒரே நபராக ஜனாதிபதி உள்ளார்.

இந்த அறிவிப்பு குறித்து நாடாளுமன்றத்திற்கு தெரியப்படுத்துவதற்காக அவையை கூட்ட வேண்டும். அவசர நிலை அறிவிப்பு, நான்கு நாட்களுக்குள் நாடாளுமன்றத்தால் ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும்.

அவசர நிலை பிரகடனப்படுத்தப்படுவதை நீதிமன்றத்தில் எதிர்த்து வழக்கு தொடுக்க முடியாது.

பொது பாதுகாப்புச் சட்டத்தின் விதிகள் அவசர நிலையை அறிவிப்பதன் மூலம் நடைமுறைக்கு வருகின்றன. இந்த விதிமுறைகள் வேறு எந்த சட்டத்தையும் மீற முடியும் என்றாலும், அவை அரசியலமைப்பை மீற முடியாது.

எவ்வளவு காலம் அவசர நிலை நீடிக்க முடியும்?

ஒரு மாதத்திற்கு செல்லுபடியாகும் வகையிலான அவசர நிலையை ஜனாதிபதி பிரகடனப்படுத்தலாம். (என்றாலும், ஒருமாதம் கடப்பதற்கு முன்பாகவே ஜனாதிபதி அதை ரத்து செய்யலாம்.)

அவசர நிலை அறிவிப்பு வெளியான நான்கு நாட்களுக்குள் அதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

அப்படி செய்யப்படவில்லையெனில், அந்த அறிவிப்பு செல்லாததாகிவிடும். அவசர நிலை 30 நாட்களுக்கு மேல் நீட்டிக்க வேண்டுமென்றால் அது நாடாளுமன்றத்தின் ஒப்புதலின் பேரிலேயே செய்யப்பட வேண்டும்.

குடிமக்களின் உரிமைகள் மீதான தாக்கங்கள் என்ன?

அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் மற்றும் மற்ற சட்டங்கள் மூலம் கிடைக்கப்பெற்றுள்ள உரிமைகள் மீது அவசர நிலை விதிமுறைகள் சில கட்டுப்பாடுகளை ஏற்படுத்தலாம்.

இந்த கட்டுப்பாடுகள், அவை தடுக்கப்பட வேண்டிய ஆபத்துகளின் நோக்கத்துக்கு ஏற்ப ஒத்த அளவில் இருக்க வேண்டிய அவசியமில்லை. தீர்மானிக்கும் நபரை பொறுத்தே கட்டுப்பாடுகளின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது.

அவசர நிலையால் கீழ்க்கண்ட அடிப்படை உரிமைகள் மீது கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்படலாம்:

  • ஒரு நபர் மீது குற்றம் சாட்டப்படும் நிலையில் வழக்கில் தீர்ப்பளிக்கப்படுவதற்கு முன்பாக அவர் குற்றமற்றவர் என்ற அனுமானத்தின் மீது கட்டுப்பாடு ஏற்படுத்தப்படலாம். (Presumption of innocence)
  • சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் மற்றும் எந்தவித பாகுபாடும் இல்லை என்பதில் கட்டுப்பாடுகள் இருக்கலாம்.
  • கைது மற்றும் தடுப்புக்காவலில் எடுப்பதற்கான வழக்கமான சட்ட நடைமுறைகள்
  • கருத்து சுதந்திரம், கூடுகை, சங்கம், இயக்கம், வேலைவாய்ப்பு, மதம், கலாசாரம், மொழி சார்ந்த அடிப்படை உரிமைகள்

அவசர நிலையால் கட்டுப்படுத்தப்பட முடியாதவை:

  • சிந்திப்பதற்கான மற்றும் உளச்சான்றின்படி செயல்படுவதற்கான சுந்ததிரம்
  • துன்புறுத்தப்படுவதிலிருந்து விடுபடுவதற்கான சுதந்திரம்
  • தகுதிவாய்ந்த நீதிமன்றத்தால் நியாயமான விசாரணைக்கான உரிமை

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை அவசரநிலை அதிகாரங்கள் மூலம் அரசு தன்னிச்சையாக பயன்படுத்தலாம். பயங்கரவாத தடுப்பு தொடர்பான அதிகாரங்கள் பரவலானவை (மேலும் அது விரிவுபடுத்தப்படலாம்), மேலும் அவசரகால அதிகாரங்களைப் போலன்றி, நாடாளுமன்றத்தின் முறையான ஒப்புதல் இதற்கு தேவையில்லை.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

சாமானிய மக்களை எப்படி பாதிக்கிறது?

பயங்கரவாதம் அல்லது வன்முறையுடன் எந்தத் தொடர்பும் இல்லாத சாதாரண மக்களின் தினசரி வாழ்க்கையில் கூட அவசரநிலை பாதிப்புகளை ஏற்படுத்தும் என சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஊடகங்கள் மீதான தாக்கம் என்ன?

குடிமக்கள் பிரசுரிப்பதன் மீது விதிக்கப்படும் கட்டுப்பாடுகள், வெளியீடுகள் மீதான கட்டுப்பாடுகள் ஆகியவை ஊடகங்களின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு