"நீதித் துறையைக் களங்கப்படுத்தும் கீழ்த்தரமான செயல்": ஓபிஎஸ்-க்கு உயர் நீதிமன்றம் கண்டனம்

தங்கள் வழக்கை விசாரிக்கும் நீதிபதியை மாற்ற வேண்டுமென ஓ. பன்னீர்செல்வம் கோரியது நீதித்துறையைக் களங்கப்படுத்தும் கீழ்த்தரமான செயல் என சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி

  1. நன்றி நேயர்களே

    இன்றைய நேரலைப்பக்கம் இத்துடன் நிறைவு பெறுகிறது. இன்றைய நாள் நிறைவின் செய்தித்துளிகள் இதோ...

    • திருவரங்கத்தில் உள்ள தந்தை பெரியார் சிலையை உடைக்க வேண்டுமென பேசிய சினிமா ஸ்டண்ட் மாஸ்டரும் இந்து முன்னணியின் கலை இலக்கிய மாநிலச் செயலாளருமான கனல் கண்ணன் மீது சென்னை சைபர் க்ரைம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
    • வைகை அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், ஐந்து மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • அமெரிக்காவின் மூத்த அரசியல்வாதியும் நாடாளுமன்ற சபாநாயகருமான நான்சி பெலோசி தைவானுக்கு சென்றுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து தைவானின் கிழக்கு கடற்கரையை நோக்கி சீனா ஏவுகணை வீசியுள்ளதாகவும், அது இலக்கை துல்லியமாக தாக்கியதாகவும் சீன அரசு ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது.
    • முன்னறிவிப்பின்றி அணைகளில் அதிக நீர் திறப்பு கூடாது என, முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
    • தங்கள் வழக்கை விசாரிக்கும் நீதிபதியை மாற்ற வேண்டுமென ஓ. பன்னீர்செல்வம் கோரியது நீதித்துறையைக் களங்கப்படும் கீழ்த்தரமான செயல் என சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
    • "நரேந்திர மோதியைக் கண்டு எனக்கு பயமில்லை. என்ன செய்ய முடியுமோ செய்யுங்கள்" - காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேச்சு
    • உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக நீதிபதி உதய் உமேஷ் லலித்தின் (யு.யு.லலித்) பெயரை தற்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணா பரிந்துரைத்துள்ளார்.
    • சினிமா ஃபைனான்சியரான 'கோபுரம் பிலிம்ஸ்' அன்புச் செழியன் தொடர்பான சுமார் 40 இடங்களில் மூன்று தினங்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவடைந்தது.
  2. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்ட நீதிபதி உதய் உமேஷ் லலித் - யார் இவர்?

  3. நேஷனல் ஹெரால்டு வழக்கு என்றால் என்ன?

    ராகுல் காந்தி - சோனியா காந்தி

    பட மூலாதாரம், GETTY IMAGES

    நேஷனல் ஹெரால்டு வழக்கு என்றால் என்ன? ஜவாஹர்லால் நேரு முதல் ராகுல் காந்தி வரை, இந்த நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் நடப்பது என்ன?

  4. சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு

    அன்புச்செழியன்

    சினிமா ஃபைனான்சியரான 'கோபுரம் பிலிம்ஸ்' அன்புச் செழியன் தொடர்பான சுமார் 40 இடங்களில் மூன்று தினங்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவடைந்தது.

    தமிழ்நாட்டின் முக்கியமான சினிமா ஃபைனான்சியரான அன்புச்செழியன் தொடர்புடைய சுமார் 40 இடங்களில் மதுரையிலும் சென்னையிலும் கடந்த ஆக.02 முதல் இன்று (ஆக. 04) வரை வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வந்தனர். சென்னையில் பத்து இடங்களிலும் மதுரையில் 30 இடங்களிலும் இந்த சோதனைகள் நடைபெற்றன.

    அன்புச் செழியன் திரைப்படங்களுக்கு நிதியுதவி செய்வதோடு, தமிழ் சினிமாவின் முக்கியமான விநியோகிஸ்தராகவும் இருந்துவருகிறார். கோபுரம் பிலிம்ஸ் என்ற பெயரில் படங்களைத் தயாரிப்பதோடு, மதுரையில் கோபுரம் திரையரங்கம் என்ற திரையரங்கத்தையும் நடத்தி வருகிறார்.

    இந்நிலையில்தான், கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் இரண்டாவது முறையாக அன்புச் செழியன் சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. மதுரை காமராஜர் சாலையில் உள்ள அன்புச்செழியன் இல்லம், மேலமாசி வீதியில் உள்ள அலுவலகம், கீரைத்துறை பகுதியில் உள்ள வீடு, செல்லூர் பகுதியில் உள்ள கோபுரம் திரையரங்கம், சென்னையில் நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் உள்ள வீடு உள்ளிட்ட 40 இடங்களில் இந்தச் சோதனைகள் நடைபெற்றன.

    இதற்கு முன்பாக கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரியில் அன்புச் செழியன் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டதில் 77 கோடி ரூபாய் ரொக்கமும் 300 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளின் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. அன்புச் செழியனிடமும் விசாரணை நடத்தப்பட்டது. பிகில் திரைப்படத்தில் பெருமளவு லாபம் கிடைத்ததாக வெளியான தகவலின் பின்னணியில் அந்தத் தருணத்தில் சோதனை நடத்தப்பட்டது.

    கோலிவுட்டின் சக்திவாய்ந்த நபராக உருவானது எப்படி? அவரின் பின்புலம் என்ன? என்பது குறித்து விரிவாக படிக்க இங்கே சொடுக்குங்கள்:

  5. மதுபோதையில் அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்த நபர் காரணம் என்ன ?

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் குடும்பத்துடன் நீண்ட நேரம் காத்திருந்தும் பேருந்து கிளம்பாததால், கோபமடைந்து, மதுபோதையில் அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்த நபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  6. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்ட யு.யு.லலித் - யார் இவர்?

    யு.யு.லலித்

    பட மூலாதாரம், ANI

    உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக நீதிபதி உதய் உமேஷ் லலித்தின் (யு.யு.லலித்) பெயரை தற்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணா பரிந்துரைத்துள்ளார். நீதிபதி என்.வி.ரமணா இம்மாதம் ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதி பரிந்துரைக்கப்பட்டுள்ள யு.யு.லலித் யார் என்பதை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்:

    • 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் யாகூப் மேனனின் மரண தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரிய யாகூப் மேனனின் மனுவை விசாரிப்பதில் இருந்து நீதிபதி லலித் 2014 இல் தன்னைத் தானே விலக்கிக் கொண்டார்.
    • 2008 மாலேகான் குண்டுவெடிப்பில் நியாயமான விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிப்பதில் இருந்து அவர் 2015 ஆம் ஆண்டில் தன்னை விலக்கிக் கொண்டார், ஏனெனில் அவர் முன்பு குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரை ஆதரித்து வாதாடியிருந்தார்.
    • 2016 ஆம் ஆண்டில், ஆசாராம் பாபு மீதான விசாரணையில் ஒரு முக்கிய அரசு தரப்பு சாட்சி காணாமல் போனது குறித்து விசாரணை கோரிய மனு விசாரணையில் இருந்து அவர் விலகினார்.
    • ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் மனுவை விசாரிப்பதில் இருந்தும் அவர் விலகினார்.
    • முத்தலாக் செல்லுபடியாகும் என்பதை விசாரித்த அரசியல் சாசன அமர்வில் நீதிபதி லலித் ஒரு அங்கமாக இருந்தார். அவர் முத்தலாக்கை ரத்து செய்தார், மேலும் முத்தலாக் என்பது இந்திய அரசியலமைப்பின் 14வது பிரிவின் அடிப்படை உரிமையை மீறுவதாகக் கூறினார்.
    • நீதிபதி லலித், எஸ்சி/எஸ்டி (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தில் ‘துஷ்பிரயோகத்தை’ தடுக்க சில பாதுகாப்புகளையும் அறிமுகப்படுத்தினார்.
    • நீதிமன்றத்தை அவமதித்ததற்காக தப்பியோடிய விஜய் மல்லையாவுக்கு 4 மாத சிறைத்தண்டனை மற்றும் ரூ.2,000 அபராதம் விதித்து நீதிபதி லலித் தீர்ப்பளித்தார்.
  7. சாட்டிலைட் தயாரித்த 10 பள்ளி மாணவிகள் - நேரில் சென்று வாழ்த்திய அமைச்சர்

    அன்பில் மகேஷ் பொய்யாமொழி

    இஸ்ரோ சாட்டிலைட் வடிவமைப்புப் பணியில் ஈடுபட்ட மாணவிகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

    இஸ்ரோவின் ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ சார்பில் இப்பள்ளியின் 10 மாணவிகள் தற்பொழுது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நவீன மென்பொருள் தொழில்நுட்பத்துடன் வான்வெளி உயரம், தட்ப வெப்பநிலை, ஈரப்பதம் மிக எளிதாக கண்டறியக்கூடிய புரோகிராமை இப்பள்ளி மாணவிகள் வெற்றிகரமாக செய்து முடித்து இருக்கிறார்கள்.

    இதை அறிந்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எவ்வித திட்டமிடல் எதுவும் இல்லாமல் இன்று திருமங்கலத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சென்று மாணவிகளைச் சந்தித்தார்.

    மாணவிகளையும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களையும் சந்தித்து தனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்ததோடு, அவர்களுக்கு புத்தகங்களையும் பரிசளித்தார். வருகின்ற ஏழாம் தேதி அப்பள்ளியின் 10 மாணவிகளும் ஸ்ரீஹரிகோட்டா இஸ்ரோ ஆய்வு மையத்திற்கு செல்ல இருக்கிறார்கள்.

  8. ஜூலை 31-ம் தேதிக்குப் பிறகு வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய முடியாதா?

  9. புதுச்சேரியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் கைது

    ஆசிரியர் கைது

    பட மூலாதாரம், police

    புதுச்சேரியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

    புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பு படித்து வரும் மாணவிக்கு அதே பள்ளியில் பணிபுரியும் விலங்கியல் ஆசிரியர் ஒருவர் பல மாதங்களாக பாலியல் ரீதியாக பல்வேறு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து, மாணவியிடம் விசாரணை செய்த குழந்தைகள் நல ஆணையம் மற்றும் காவல் துறையினர், மாணவியிடம் இருந்து புகாரை பெற்றனர். மாணவி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், தனியார் பள்ளி விலங்கியல் ஆசிரியர் சகாய டோனி வளவன் (வயது 42) மீது போக்சோ சட்டத்தின் கீழ் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்நிலையில், முதலியார்பேட்டை காவல் நிலைய போலீசார் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட தனியார் பள்ளி விலங்கியல் ஆசிரியரான சகாய டோனி வளவனை கைது செய்தனர்.

    இன்று பிற்பகல் கைது செய்யப்பட்ட சகாய டோனி வளவனை போலீசார் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    இதையடுத்து அவரை புதுச்சேரி மத்திய சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். முன்னதாக மாணவிக்கு பாலியல் சீண்டல் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட புகாரில் குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியரைப் பள்ளி நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  10. கோலிவுட்டின் சக்திவாய்ந்த நபராக அன்புச் செழியன் உருவானது எப்படி? அவரின் பின்புலம் என்ன?

  11. ‘என் தம்பிக்கு வேண்டாம் அந்த வலி’- ஆன்லைன் மூலம் 47 கோடி ரூபாய் திரட்டிய அக்காவின் கடைசி நிமிடங்கள்

  12. கோவை: தனியார் பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் மேலும் இருவர் கைது

    தனியார் பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அந்த மாணவிக்கு அவருடைய ஆசிரியர் பாலியல் துன்புறுத்தல் கொடுத்து வந்ததும் அதை பள்ளி நிர்வாகம் மறைத்ததும் காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது.

    இந்த வழக்கில் பள்ளி ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி மற்றும் பள்ளி தலைமையாசிரியர் மீரா ஜாஸ்மின் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில், அதே வழக்கில் மேலும் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    மாணவியின் தற்கொலை கடிதத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் மனோராஜ் மற்றும் சுல்தான் என்கிற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  13. கனல் கண்ணன்: பெரியார் சிலை குறித்து சர்ச்சை பேச்சு; வழக்கு பதிவு - நடந்தது என்ன?

  14. மீனவர்களுக்கான எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

    இன்று முதல் அடுத்து வரும் 4 தினங்களுக்கான மீனவர்களுக்கான எச்சரிக்கை அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

    சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், "குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

    கேரள - கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோர பகுதிகள் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும் இடை இடையே 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

    எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    ஆக.05 முதல் ஆக. 08 வரையிலான மீனவர்களுக்கான எச்சரிக்கை அறிவிப்பை காண்க:

    வானிலை

    பட மூலாதாரம், IMD Chennai

  15. புதுச்சேரியில் சாவர்க்கர் கல்லை பதித்ததில் எந்த தவறும் இல்லை - தமிழிசை சௌந்தரராஜன்

    தமிழிசை சௌந்தரராஜன்

    புதுச்சேரியில் சாவர்க்கர் கல்லை பதித்ததில் எந்த தவறும் இல்லை என, துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரியில் தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்குத் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பட்டங்களை வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தியாக சுவரில் சாவர்க்கர் பெயர்‌ பதிப்புக்கு எழும் எதிர்ப்புகள் குறித்துப் பேசினார்.

    "சாவர்க்கர் 10 ஆண்டுகள் தனிமை சிறையில் சிறைப்பட்டு இந்த நாட்டின் சுதந்திரத்திற்காக போராடி இருக்கிறார். சாவர்க்கர் கல்லை பதித்ததற்கு அநாவசியமான பிரச்னையை செய்து கொண்டிருக்கிறார்கள்.

    அவர் சிறையில் இருந்தார் என்பதையோ, சுதந்திரத்திற்காகத் தான் சிறை சென்றார் என்பதையோ யாராலும் மறுக்க முடியாது. அதனால் அவரது நினைவுக் கல்லை புதுவையில் பதித்ததில் எந்த தவறும் இல்லை. இதை யாரும் அரசியலாக்க வேண்டாம். அரசியலாக்கினால் கூட அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம்" என தெரிவித்தார்.

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

    சாவர்க்கர் எட்டு முறை மன்னிப்பு கடிதம் எழுதியதாக ஆளுநரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "அதை சொல்பவர்கள் தனிமைச் சிறையில் அவர் இருந்தாரா? இல்லையா? இந்த நாட்டுக்காக போராடினாரா? இல்லையா? ஒரே ஒரு நாள் சென்று அந்தமான் சிறையில் இருக்க முடியுமா? முதலில் சிறையில் இருந்துவிட்டு சொல்லுங்கள்.

    அவர் அத்தனை ஆண்டுகள் சிறையில் இருந்ததனால் சில பிரச்னைகள் அவருக்கு ஏற்பட்டிருக்கலாம். அந்தமான் சிறை சில அடிகள் தான் இருக்கும். இரு பக்கமும் திரும்ப முடியாது" என தெரிவித்தார்.

  16. "நரேந்திர மோதியைக் கண்டு எனக்கு பயமில்லை" - ராகுல் காந்தி

    "நரேந்திர மோதியைக் கண்டு எனக்கு பயமில்லை. என்ன செய்ய முடியுமோ செய்யுங்கள்" - காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேச்சு

    ராகுல் காந்தி
  17. "நீதித் துறையைக் களங்கப்படுத்தும் கீழ்த்தரமான செயல்": ஓ.பி.எஸ்-க்கு உயர் நீதிமன்றம் கண்டனம்

    ஓ.பன்னீர்செல்வம்

    தங்கள் வழக்கை விசாரிக்கும் நீதிபதியை மாற்ற வேண்டுமென ஓ. பன்னீர்செல்வம் கோரியது நீதித்துறையைக் களங்கப்படும் கீழ்த்தரமான செயல் என சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

    ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக் குழு தொடர்பாக பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்துவுடன் இணைந்து ஓ. பன்னீர்செல்வம் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு இன்று விசாரணைக்கு வரவிருந்தது.

    இந்த நிலையில், அந்த வழக்கை கிருஷ்ணன் ராமசாமி விசாரிக்கக்கூடாது என வைரமுத்துவும் ஓ. பன்னீர்செல்வமும் இணைந்து சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு நேற்று கடிதம் எழுதியிருந்தனர். இந்த விவகாரத்தை சம்பந்தப்பட்ட தனி நீதிபதியுடன் விவாதித்து முடிவெடுப்பதாக தலைமை நீதிபதி தெரிவித்திருந்தார்.

    இதற்கிடையில், முன்பே பட்டியலிட்டபடி வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க கால அவகாசம் தேவைப்படுவதாகவும் வழக்கை நாளைக்குத் தள்ளிவைக்க வேண்டுமென்றும் வைரமுத்து தரப்பு கோரியது. அதற்குப் பிறகு, இந்த வழக்கு தொடர்பாக தலைமை நீதிபதியிடம் கடிதம் கொடுத்திருப்பதாகவும் வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்க வேண்டுமென்றும் ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    சென்னை உயர் நீதிமன்றம்

    என்ன மாதிரியான வேண்டுகோள் அந்தக் கடிதத்தில் வைக்கப்பட்டிருந்தது என நீதிபதி கேட்டபோது, ஜூலை 11ஆம் தேதி காலையில் அதிமுக பொதுக் குழு கூட்டம் நடக்கலாமா என்பது குறித்த வழக்கில் காலை 9 மணிக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பில் வழக்குக்குத் தொடர்பில்லாத வகையில் தனக்கு எதிரான கருத்துகள் இடம்பெற்றிருப்பதாகவும் அதனால், வேறு அமர்வுக்கு மாற்றும்படி கோரியிருப்பதாக ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதைக் கேட்ட நீதிபதி, உங்களது கருத்து நீதித் துறைக்கு களங்கம் விளைவிக்கும்படியும் கீழ்த்தரமானதாகவும் இருக்கிறது. நீதித் துறைக்கு களங்கம் ஏற்படுத்துவதைப் போல நடந்துகொள்ளாதீர்கள் என்றும் கூறினார்.

    வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. தலைமை நீதிபதிக்கு அளித்த கடிதத்தைப் பொறுத்தவரை, ஓ. பன்னீர்செல்வம் தரப்பு தனியாக நடைமுறைகளை மேற்கொள்ளலாம் என்றும் நீதிபதி கூறினார். மேலும், தான் தெரிவித்த கருத்துகளில் திருப்தியில்லை என்றால், அதை மாற்றும்படி தன்னிடமே அணுகியிருக்கலாம் என்றும் உத்தரவில் திருப்தியில்லை என்றால் மேல் முறையீடு செய்திருக்கலாம் என்றும் நீதிபதி கூறினார். இப்படி கடிதம் கொடுத்திருப்பது மிக மோசமான நடவடிக்கை என்றும் நீதிபதி கூறினார்.

    இந்த வழக்கு நாளை பிற்பகல் 2.15 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு வரவிருக்கிறது.

  18. இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி குறித்து நடிகர் சூரி பேசியது என்ன?

    "ஆயிரம் கோயில்கள் கட்டுவதை விட ஒருவரை படிக்க வைப்பது பெரியது. அதனால்தான், உங்கள் பின்னால் அவ்வளவு பேர் இருக்கிறார்கள்" - விருமன் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யாவைக் குறிப்பிட்டு நடிகர் சூரி பேச்சு

  19. கந்துவட்டி கொடுமையால் 4 பேர் உயிரிழந்த வழக்கு - ஆவணங்களை அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

    உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

    கந்துவட்டி கொடுமையால் 4 பேர் உயிரிழந்த விவகார வழக்கில் விசாரணையை தொடங்கும் வகையில், இரண்டு வாரங்களுக்கு உள்ளாக அதற்கான ஆவணங்களை அனுப்ப நெல்லை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

    தென்காசி அச்சன்புதூரைச் சேர்ந்த கோபி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "கடந்த 2017 ஆம் ஆண்டு கந்துவட்டி கொடுமை காரணமாக சுப்புலட்சுமி, இசக்கிமுத்து அவரது குழந்தைகள் இருவர் என 4 பேரும் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர்.

    இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்ட முத்துலட்சுமி, தளவாய் ராஜ், காளி, கார்த்திக் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கு நெல்லை நீதித்துறை நடுவர் முன்பாக நடைபெற்று வரும் நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தொடர்ச்சியாக நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.

    ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் முறையாக ஆஜராவதில்லை. சம்பவம் நிகழ்ந்து 5 ஆண்டுகள் ஆன நிலையிலும் வழக்கு விசாரணை கிடப்பில் போடப்பட்டுள்ளது போல் உள்ளது. ஆகவே, இந்த வழக்கு விசாரணையை துரிதப்படுத்தும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிவஞானம், "நெல்லை செஷன்ஸ் நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணையை தொடங்கும் வகையில், இரண்டு வாரங்களுக்கு உள்ளாக அதற்கான ஆவணங்களை அனுப்ப நெல்லை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார். வழக்கில் குற்றவாளிகள் ஆஜராகாமல் தாமதித்தால், வாரண்ட் அனுப்பி ஆஜராகச் செய்யலாம்" என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

  20. தந்தூரி சிக்கனுக்கு மயனைஸ் இல்லை. சிக்கன் கடையில் அடிதடி

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு